டெல்லிக்கு சுதீஷ்! தமிழ்நாட்டுக்கு விஜயபிரபாகரன்!! தே.மு.தி.க பஞ்சாயத்து முடிந்தது..!!

By Selva KathirFirst Published Jan 10, 2019, 9:40 AM IST
Highlights

டெல்லி அரசியலுக்கு சுதீஷ் என்றும் தமிழ்நாடு அரசியலுக்கு விஜயபிரபாகரன் என்றும் ஒட்டு மொத்தமாக கட்சியை பிரேமலதா வழிநடத்துவது என்றும் தே.மு.தி.க பஞ்சாயத்தில் முடிவாகியுள்ளது.

டெல்லி அரசியலுக்கு சுதீஷ் என்றும் தமிழ்நாடு அரசியலுக்கு விஜயபிரபாகரன் என்றும் ஒட்டு மொத்தமாக கட்சியை பிரேமலதா வழிநடத்துவது என்றும் தே.மு.தி.க பஞ்சாயத்தில் முடிவாகியுள்ளது.

தே.மு.தி.க துவங்கியது முதல் அக்கட்சி தலைவர் கேப்டனின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் எல்.கே.சுதீஷ். அப்போது முதலே கட்சியின் டெல்லி விவகாரங்களை சுதீஷ் தான் கவனித்து வந்தார். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க – பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தியது சுதீஷ் தான். கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக சுதீஷ் கேப்டனால் அறிவிக்கப்பட்டார்.

அந்த அளவிற்கு டெல்லியில் தே.மு.தி.க பிரதிநிதியாகவே சுதீஷ் வலம் வந்தார். மேலும் எப்படியாவது ராஜ்யசபா பதவியை பெற்றுவிட வேண்டும் என்று தீர்க்கமாக அவர் முயன்றும் கடைசி வரை அது கானல் நீராகவே போனது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்வி, கேப்டன் உடல் நிலை பாதிப்பு என அடுத்தடுத்து தே.மு.தி.க இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சியை பலப்படுத்த சுதீசுக்கு தே.மு.தி.கவின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

பொறுப்பு கிடைத்த உடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை துவங்கினார் சுதீஷ். மேலும் கேப்டன் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி அரசியல் மட்டும் இல்லாமல் தமிழக அரசியலிலும் சுதீஷ் கவனம் செலுத்துவார் என்று பேச்சு அடிபட்டது. மேலும் இடைத்தேர்தலில் கூட சுதீஷ் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாரகன் கட்சி நடவடிக்கையில் இறங்கினார். 

இதனால் தமிழகத்தில் தே.மு.தி.கவின் முகம் யார் என்று சுதீஷ் – விஜய பிரபாகரன் இடையே பனிப்போர் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் சுதீஷ் தனது இருப்பை விட்டுக் கொடுக்க மறுத்தாக கூறப்பட்டது. அதே சமயம் விஜயபிரபாகரன் அரசியல் ரீதியாக வளர்வதிலும் தனக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் தனக்கான முக்கியத்துவம் விஜயபிரபாகரனை மிஞ்சியதாக இருக்க வேண்டும் என சுதீஷ் கருதுவதாகவும் பேசப்பட்டது.

 

 இந்த நிலையில் இந்த பனிப்போர் மோதலாக உருவெடுத்துவிடக்கூடாது என்று பிரேமலதா பஞ்சாயத்து செய்து இறுதியில் சுதீஷை டெல்லி அரசியலை மட்டும் கவனித்துக் கொள், மாநில அரசியை விஜயபிரபாகரன் பார்த்துக் கொள்வான் என்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அக்காவின் பேச்சை வேதவாக்காக எடுத்துக் கொண்டு விஜயபிரபாகரனுக்.கு வழிவிட சுதீஷ் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

click me!