காத்திருந்த தினகரன்! வலையில் வான்டடாக வந்து விழுந்த ஸ்டாலின்! பின்னணி இது தான்!

By Selva KathirFirst Published Jan 10, 2019, 9:28 AM IST
Highlights

மு.க.ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோத வழிமேல் விழி வைத்து காத்திருந்த டி.டி.வி தினகரன் தற்போது புதுத்தெம்புடன் உற்சாகமாக வலம் வருகிறார்.

மு.க.ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோத வழிமேல் விழி வைத்து காத்திருந்த டி.டி.வி தினகரன் தற்போது புதுத்தெம்புடன் உற்சாகமாக வலம் வருகிறார்.

தினகரன் என்கிற பெயரை மறந்தும் கூட உச்சரிக்கமாட்டார் மு.க.ஸ்டாலின். தினகரன் அ.தி.மு.கவில் கோலோச்சியது, ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வென்றது, தனிக்கட்சி ஆரம்பித்தது என அடுத்தடுத்து அரசியலில் பரபரப்பாக பேசப்படடாலும் அவரை பற்றி பேசுவதை ஸ்டாலின் தவிர்த்தே வந்தார். இதற்கு காரணம் தனக்கு நிகரான ஒரு நபராக தினகரனை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதை ஸ்டாலின் விரும்பியதில்லை. அதே சமயம் ஸ்டாலின் விவகாரத்தில் டி.டி.வி சற்று அடக்கியே வாசித்து வந்தார். 

அதே சமயம் ஸ்டாலின் தன்னை பற்றி பேச வேண்டும், தனக்கு எதிராக பேச வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தினகரனுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்வது தான் தமிழகத்தில் அ.ம.மு.கவை பிரதான கட்சியாக உருவகப்படுத்தும் என்பது டி.டி.வியின் கணக்கு. இதனை தெரிந்து தான் அ.ம.மு.க, தினகரன் ஆகிய பெயர்களை ஸ்டாலின் மறந்தும் உச்சரிப்பது இல்லை. ஆனால் திடீரென சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தினகரனை ஒரு பிடி பிடித்தார். 

இதற்கு காரணம் திருவாரூர் தேர்தலில் அமமுகவை பார்த்து ஸ்டாலின் பயப்படுவதாக தினகரன் கூறியிருந்தார். தோல்வி பயம் காரணமாகவே இடைத்தேர்தலை தி.மு.க எதிர்ப்பதாகவும் தினகரன் தெரிவித்திருந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை தான் சென்னை விமான நிலையத்தில் கொட்டித் தீர்த்தார் ஸ்டாலின். அதாவது இடைத்தேர்தலை பார்த்து தி.மு.க பயப்படுவதாக தினகரன் கூறியுள்ளது பற்றி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

வழக்கமாக தினகரன் குறித்து கேள்வி எழுப்பினால் அதனை தவிர்ப்பது ஸ்டாலின் வழக்கம். ஆனால் அன்றைய தினம் தினகரன் மீது பெரா வழக்கு நிலுவையில் உள்ளது, தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.  வாரத்திற்கு ஒரு நாள் கோவிலுக்கு செல்வது போல் பெங்களூர் செல்பவர் தினகரன். எனவே அவர் தான் அச்சப்பட வேண்டும், தி.மு.க இல்லை என்று ஸ்டாலின் சுடச்சுட பதில் அளித்தார். 

இந்த பேட்டிக்காகவே இத்தனை நாள் காத்திருந்தவர் போல ஸ்டாலினுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டார் தினகரன். அதாவது திருட்டு ரயிலேறி சென்னை வந்த கலைஞர் குடும்பத்தின் ஸ்டாலின் ஆசிய பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பதாக கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மானத்தை பற்றி கவலைப்படாத தினகரனிடம பேசவே முடியாது என்று முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டது. இதுநாள் வரை மோதலை தவிர்த்து வந்த ஸ்டாலின் – தினகரன் மோதலின் பின்னணி, எடப்பாடிய ஆஃப் செய்வதற்காக என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து ஆறு நாள் விடுமுறை, பொங்கலை கொண்டாட அனைவருக்கும் ரூபாய் 1000 என எடப்பாடியின் திட்டங்கள் தமிழக மக்களை வெகு எளிதாக சென்று சேர்ந்து வருகிறது. மேலும் இதே போல் அடுத்தடுத்து சில திட்டங்களை செயல்படுத்தி அடித்தட்டு மக்களை எடப்பாடி கவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி, தினகரனுக்கும் – ஸ்டாலினுக்கும் தான் அரசியலில் போட்டி என்கிற ரீதியிலான ஒரு விஷயத்தை உருவாக்கவே ஸ்டாலின் – தினகரன் தற்போது மோதல் போக்கை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஸ்டாலின் தன்னை எதிர்த்து அரசியலை ஆரம்பித்துள்ளதால் தமிழக அரசியல் அரங்கில் தனக்கான இடம் உறுதியாகிவிடும் என்றும் தினகரன் நம்புகிறார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசியலில் தங்களுக்கு போட்டியில்லை என்று ஸ்டாலினும் – தினகரனும் மக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் இருவரும் சொல்லி வைத்துக் கொண்டு செயல்படுவதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

click me!