பசி, பட்டினியால் இனி ஒரு உயிர் போகக்கூடாது.. வறுமை மட்டும் மாறவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை !

By Raghupati RFirst Published Feb 13, 2023, 4:55 PM IST
Highlights

உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே இறந்து போன கணவன் மற்றும் தாயாரின் உடல்களை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் ஒரு வார காலமாக வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கனகாம்பாள் (80). இவர்களது மகள் சாந்தி (60). சாந்திக்கு திருமணமான பின்பு கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார்(34), மகள் சசிரேகா என்ற மகளுடன் தாயார் வீட்டிலேயே இருந்து வந்தார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகள் சசிரேகாவிற்கு திருமணமாகி காங்கேயத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று குமணன் வீதி பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

இதையும் படிங்க..அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம் மட்டுமல்ல.. சீனாவின் உளவு பலூனில் சிக்கிய இந்தியா.? அதிர்ச்சியில் உலக நாடுகள்

அப்போது வீட்டினுள் சாந்தியின் அம்மா கனகாம்பாள் மற்றும் கணவர் மோகனசுந்தரம் ஆகியோர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வீட்டினுள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த 2 பேரின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில்  உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது.  தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இன்றைய நிலையில்  சாலையில் படுத்துறங்கும் 90 சதவீத மக்கள் வறுமையில் உணவு இல்லாமல்தான் உறங்கும் நிலை உள்ளது. 

எத்தனை தொழில் நுட்பங்கள் பெருகினாலும், எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பசி,  பட்டினி, பஞ்சம் போன்ற கொடுமைகளை வெல்ல முடியாமல் மனித குலமே அழிந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் முழுமையான உணவு  கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி ஒவ்வொரு வார்டுக்கு ஒரு அமைச்சரை நியமித்து ஓட்டு வாங்கும் அரசியல் மட்டும் செய்கிறார்கள். 

இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!

டீ குடிப்பது, வடை சுடுவது போன்ற விளம்பர அரசியலை இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். உண்மையில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் ஆட்சியாளர்கள் இங்கு யாரும் இல்லை.  தேர்தல் சமயத்தில் ஓட்டுக்காக மக்களை சந்திக்கும் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே செல்வதில்லை.  மக்களை பற்றி கவலைப்படுவதும் இல்லை.  

மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி துளியும் நினைத்துகூட பார்ப்பது இல்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்,  வறுமையால் இன்று இரண்டு உயிர்கள் உயிரிழந்திருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வறுமையை போக்காமல் மக்களின் உயிர்கள் பறிபோக காரணமாக இருக்கும் அரசியல்வாதிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் ஓட்டுக்காக  விளம்பர அரசியல் செய்யாமல் உண்மையில் மக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். பசி, பட்டினி, வறுமையை ஒழிக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும், மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும். பசியால் இனி ஒரு உயிர் கூட போகாத நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை,புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன்,அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமானது.பசி,பட்டினி,வறுமையை ஒழிக்க,நல்ல திட்டங்களை கொண்டு வரவேண்டும்.பசியால் இனி ஒரு உயிர்கூடபோகாத நிலையை உருவாக்கவேண்டும் pic.twitter.com/cS2InWLVNa

— Vijayakant (@iVijayakant)

இதையும் படிங்க..ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டேனா.? ஆடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சூர்யா சிவா!

click me!