
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் விருப்ப மனு தாக்கல் செய்யவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
தேமுதிக வின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தொகுதி பெயர் குறிப்பிடாமல் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அதனை தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பார்த்த சாரதி மற்றும் அவைத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
மேலும் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் மாவட்ட வாரியாக நோ்காணல் நாளை முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், கட்சி கூட்டத்தில் பேசிய சுதீஸ் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்காக அதிமுகதான் எங்களை கெஞ்சுகிறது, நாங்கள் அவர்களை கெஞ்சவில்லை என்வும், 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணி இல்லை என்றால், அதிமுக என்ற ஒரு கட்சியை தெரிந்திருக்காது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இது மேலும் அக்கூட்டணிக்கு இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேமுதிகவில் போட்டியிட அவர் விருப்ப மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.