
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதாக கூறி அவர்தான் உண்மையான பொதுச்செயலாளர் என எடப்பாடி ஒப்புக்கொண்டு விட்டதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.
அதில், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது, பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து, டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதாக கூறி அவர்தான் உண்மையான பொதுச்செயலாளர் என எடப்பாடி ஒப்புக்கொண்டு விட்டதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ஃபேஸ்புக்கில், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மறைமுகமாக சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அப்படி என்றால், சசிகலா பொதுச் செயலாளர் என்ற வகையில் பிறப்பித்த உத்தரவில் பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கிவிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமியையும் தலைமை கழக செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். எனவே பொதுச்செயலாளரால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இணைந்து பொதுச்செயலாளரை நீக்க முடியாது.
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது எம்.ஜி.ஆந் எழுதி வைத்த கட்சி சட்டத்திற்கு விரோதமானது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.