முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காஷ்மீர் விவகாரம், ராணுவத்தளபதி குறித்து விமர்சனம் செய்திருந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் பதில் என்ன?, ஏன் அந்த கட்சி மவுனம் காக்கிறது என்று மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரம் பேச்சு
கடந்த 2 நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ ஜம்மு-காஷ்மீரில் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. தொடர்ந்து அங்கு தவறுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை சரி செய்ய நீண்ட நாட்கள் ஆகும்.
சாவு அதிகரிப்பு
பாதுகாப்பு நடவடிக்கையில் யாராவது குறிக்கிட்டால் அவர்களை தேசவிரோதிகள் என்று ராணுவத் தளபதி விபின்ராவத் கூறியுள்ளார்.இந்த கருத்து சிந்தனைக்கு ஒத்துவராதது, பொறுத்துக் கொள்ள முடியாத வார்த்தைகள்.
காஷ்மீரில் ஆண்டுக்கு ஆண்டு கொல்லப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'' எனத் தெரிவித்து இருந்தார்.
எதிர்ப்பு
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பாரதியஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. காங்கிரஸ் கட்சி ப.சிதம்பரத்தின் கருத்துக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது.
வியப்பு
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ ப.சிதம்பரத்தின் கருத்துக்களை குறிப்பிட்டு நாங்கள் காங்கிரஸ் கட்சியிடம் பதில் அளிக்கக் கோரி 24 மணி நேரம் கடந்துவிட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சி சிதம்பரம் கருத்து குறித்து எந்தவிதமான பதிலும் சொல்லாதது வியப்பளிக்கிறது.
பதில் வேண்டும்
மூத்த தலைவர் ஒருவர் தேசவிரோதமான கருத்துக்களை கூறியபின் ஏன் கருத்துச் சொல்ல காங்கிரஸ் கட்சி தயங்குகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ப.சிதம்பரம் கருத்து குறித்து பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ராணுவத் தளபதி குறித்த சிதம்பரத்தின் விமர்சனக் கருத்துக்களை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பது தெரிய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.