டிடிவி தினகரன் அதிரடி முடிவு...! தமிழக அரசியலில் பரபரப்பு

By vinoth kumarFirst Published Oct 22, 2018, 4:10 PM IST
Highlights

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குற்றாலத்தில் தங்க வைக்க டிடிவி தினகரன் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குற்றாலத்தில் தங்க வைக்க டிடிவி தினகரன் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். சபாநாயகர் நடவடிக்கையில் தலையிட முடியாது என நீதிபதி இந்திரா பானர்ஜியும், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கியதால் இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

 இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என கூறப்படும் நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களையும், குற்றாளத்தில் தங்குமாறு டிடிவி தினகரன் அவர்களுக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும், மதுரை வழியாக குற்றாலம் அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும், குற்றாலத்தில் தங்க வைப்படுவதற்கான காரணம், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரும்போது, ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், மேலும் 18 எம்எல்ஏக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிடிவி தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

இதற்கு முன்பாக கூட 18 எம்எல்ஏக்கள் தகதி நீக்க வழக்கில் இதற்கு முன்பாகவும், 18 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக இருப்பதற்காக அவர்கள் அனைவரும் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கூர்க் அழைத்துச் செல்லப்பட்டனர். கூர்கில் இருந்தபோதுதான், சபாநாயகர் அவர்களை தகுதிநீக்க உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இறுத் தீர்ப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, 18 எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில்தான் ஒருசில முடிவுகள் எடுப்பதற்கு அது வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பு, பல்வேறு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஓரிடத்தில் இருக்கும் அனைவரிடமும் கருத்து கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க தினகரன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான், 18 எம்எல்ஏக்களும் இன்று அல்லது நாளை குற்றாலம் அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிடிவி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான குற்றலாத்தில் உள்ள இசக்கி ரிசார்ட்-ல் தங்க வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 இவர்கள் 2 அல்லது 3 நாட்கள் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கூறும்போது, இதுபோன்ற எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. நேற்று நடந்த கூட்டத்தின்போது சிலர் வெளிநாடு செல்வதாக கூறினார்கள். அப்போது தினகரன், விரைவில் தீர்ப்பு வெளிவர உள்ளது. எனவே வெளிநாடு செல்லாமல், குற்றாலம் சென்று வாருங்கள் என்றார். அதன் அடிப்படையில் சில எம்.எல்.ஏ.,க்கள் செல்கின்றனர் என்று கூறினார்.

click me!