ஜெயலலிதா இருந்தவரை கம்பீரமாக, ராணுவக் கட்டுக் கோப்புடன் இருந்த அதிமுக என்ற கட்சி, அவர் இறந்த பின்னர் குழுக்களாக சிதறி பிளவு பட்டுப் போனது. சசிகலாவால் கூவத்தூரில் வைத்து பாதுகாக்கப்பட்ட ஆட்சி, இப்போது எடப்பாடி, ஓபிஎஸ் என்ற இருவரால் கைப்பற்றப்பட்டுவிட, நிர்கதியாக விடப்பட்டிருக்கிறார் சசிகலா. அந்தக் கட்சியையும் ஆட்சியையும் மீண்டும் கைப்பற்றுவேன் என்று சூளுரைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தினகரனால், அதை செயல்படுத்த முடிந்ததா என்றால் இல்லை... இப்போது மிச்சம் மீதி இருக்கும் கட்சியையும் அழித்துக் கொண்டிருக்கிறார் அவர் என்று புகார் சொல்லியிருக்கிறார்கள் பரோலில் வெளியே வந்த சசிகலாவிடம்!
கல்லீரல், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தன் கணவர் எம்.நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்க என்று கூறி பரோலில் வெளிவந்துள்ளார் சசிகலா. அவருக்கான பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் சிறைக்குச் சென்றாக வேண்டும்.
பரோலில் வெளி வந்த காலத்தில், அவர் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவரை கொல்லைப்புறம் வழியாக மஃப்டியில் சந்தித்து அரசியல் பேசிய அமைச்சர்களும் உண்டு என்று கிசுகிசுக்கிறார்கள். தான் சந்திக்கும் நபர்கள் குறித்து, மத்திய மாநில உளவுப்பிரிவு போலீஸார் கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்தே வைத்திருந்த சசிகலா, வீட்டில் இருந்த படியே, போன் மூலம் சிலரிடம் பேசியுள்ளார். சிலர் நேரில் வந்து சந்தித்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் சிலரும் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, டிடிவி தினகரன் குறித்து சரமாரியாக குற்றச்சாட்டுகளை சசிகலாவிடம் ரகசியமாகப் போட்டுக் கொடுத்துள்ளனர். அவருடைய செயல்பாடுகளால், கட்சி மேலும் மேலும் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளனராம்.
கட்சிக்கு யார் ஆதரவாக இருப்பவர்கள், எவர் எதிரிகள் என்றுகூட அறியாமல், பலரையும் அவர் கட்சியை விட்டு நீக்கியுள்ளார். மூத்த நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்காமல், எவராவது சொல்வதை மனதில் வைத்துக்கொண்டு, சர்வாதிகாரத்தனமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். ஊடகங்களிடம் அவர் பேசும் விதம் சரியில்லை. அவர் பேசும் முறையாலேயே பலரும் அதிருப்தி அடைகிறார்கள்., கட்சியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு அவர் பேசும் விதம் காரணம்... என்றெல்லாம் போட்டுக் கொடுத்த முக்கிய நிர்வாகிகள், தாங்கள் தினகரனுக்கு எதிரான நிலை எடுக்க அவரது சர்வாதிகாரத்தனம்தான் காரணம், தங்கள் ஆதரவாளர்கள் மீது அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணம் என்றெல்லாம் போட்டுக் கொடுத்துள்ளனர்.
இப்படி நிர்வாகிகள் பலர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்ததில் சசிகலா கொஞ்சம் அதிர்ச்சியடையவே செய்தாராம். இதை அடுத்து, தினகரனை அழைத்த சசிகலா, இந்த விவரங்களைச் சொல்லி, சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு கூறினாராம். மேலும், கட்சி முக்கியமா, அக்கா மகன் தினகரன் முக்கியமா என்று கேட்டால், கட்சியே முக்கியம் என்றுதான் தம்மால் முடிவெடுக்க முடியும் என்று தெளிவாகச் சொல்லியுள்ளாராம். இதனால் தினகரன் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் கட்சி கையை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் சசிகலா இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, சசிகலா குடும்பத்தாரை ஒட்டு மொத்தமாக கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. ஆனால் பின்னர் சசிகலா மட்டும் ஆறு மாத இடைவெளியில் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து உள்ளே வர, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஜெயலலிதாவும் மறைந்து விட, தனது முப்பதாண்டுகளுக்கும் மேலான கனவை நனவாக்கும் முயற்சியில் சசிகலா இருந்து வருகிறார். ஒட்டு மொத்த அதிமுக.,வும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட வேண்டும் என்று எண்ணி செயல்படும் போது, டிடிவி தினகரனின் செயல்பாடுகள், கட்சியை கரைத்துவிடுமோ என்று கலங்குகிறார் சசிகலா.
இதை அடுத்து குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்திய சசிகலா, அவர்களுக்கு சில கட்டளைகளை வழங்கியுள்ளார். தாம் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், அதுவரை கவனத்துடன் செயல்படவும் கட்டளையிட்டுள்ளாராம்..
இதனிடையே, நடராஜனைப் பார்க்க பரோலில் சசிகலா வெளிவந்தது ஒரு கண் துடைப்புதான் என்று கூறுகிறார்கள் அதிமுகவினர். வெகு காலம் தன் கணவர் குறித்த எந்த வித அக்கறையும் இல்லாமல் தனித்து இருந்த சசிகலா, இப்போது கணவர் குறித்த அறுவை சிகிச்சையை சாக்காக வைத்து தனது அரசியல் நடவடிக்கைகளை துரிதப் படுத்தவே வந்துள்ளார் என்கிறார்கள். அதற்கு, தினகரன் செய்த படாடோபமான ஏற்பாடுகள் குறித்தும் கூறுகிறார்கள்.
உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்க்க வரும் ஒரு மனைவி, இப்படியா வருவார் என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், இழுத்துகிட்டு இருக்கிற புருசன பார்க்க வர பொண்டாட்டிக்கு வாண வேடிக்கையோடு வரவேற்பு கொடுத்த ஒரே கரகாட்ட கோஷ்டி நம்ம #தினகரன் கோஷ்டிதான்... என்று கலாய்க்கின்றனர். ஒரு