
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த விஷயத்தில், அதிமுகவில் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அதிகாரப்போட்டி நேரடியாகவே வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
அதிமுகவின் ஆதரவை கோரி, பெங்களூரு சிறையில் சசிகலாவை, தம்பிதுரை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்போதே, பாஜகவுக்கு அதிமுக ஆதரவு என்ற அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள், பாஜக தலைவர்கள், கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு கோர வேண்டும் என்று பேட்டி கொடுத்தனர்.
ஆனால், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, சசிகலாவின் ஆணைப்படி, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அறிக்கை வெளியிட்டார் தினகரன்.
மறுபக்கம், தினகரன் ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிராக தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர்.
சசிகலாவின் படம் மற்றும் பெயரை எந்த காரணத்திற்காக மறைத்தீர்களோ, அதே காரணங்களுக்காகத்தான், கட்சி அலுவலகத்தில் இருந்து சசிகலா படங்கள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன என்றெல்லாம் எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கூறினர்.
அதிமுக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, சசிகலா வாரிசு அரசியலை புகுத்தியதன் காரணமாகவே நாங்கள் அவரை புறக்கணிக்கிறோம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே கூற ஆரம்பித்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கட்சி கட்டுப்பாட்டுடன்தான் இருக்கிறது, சிலர் தலைவர்களாக முயற்சி செய்கின்றனர். அதெல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறினார்.
மேலும், நான் விதித்த 60 நாள் காலக்கெடு ஆகஸ்ட் 5 ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு, அதற்கான விடை கிடைக்கும் என்று ஒரே போடாக போட்டார் தினகரன்.
எடப்பாடியை தம் வசம் வைத்துக் கொண்டு, தமக்கு எதிராக காய் நகர்த்தி வருவதால், கடும் கோபத்தில் இருக்கும் தினகரன், நிச்சயம் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று உறுதியாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தினகரனின் இந்த அறிவிப்பால், முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் என அனைவரும் ஆட்டம் கண்டுள்ளனர் என்றே கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.