விண்ணை முட்டுது டீசல் விலை.. விலைவாசியை குறைக்க இதை செய்யுங்க.. முதல்வருக்கு ஓபிஎஸ் செம்ம ஐடியா.

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2021, 12:46 PM IST
Highlights

தற்போது கொரோனா போன்றவற்றின் தாக்கம் குறைந்து அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயல்பாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்ற நிலையில் தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ மாணவியர், அலுவலகங்களுக்குச் செல்வோர், சுற்றுலாப்பயணிகள், ஏழை எளிய நடுத்தர பிரிவினர் என அனைவரும் கூடுதல் சுமைக்கு தினந்தோறும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். 

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை ஓரளவு குறைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி டீசல் விலையை குறைப்பது தான் எனவே தமிழக முதலமைச்சர் டீசல் மூலம் அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்லும் மதிப்பு கூட்டு வரி வருவாயை கருத்தில் கொண்டு டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும், மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக பெட்ரோலியப் பொருட்கள் திகழ்கின்றன என்றாலும், அதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது டீசல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்குவது டீசல் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது டீசல், இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த டீசல் தற்போது அன்றாடம் உயர்த்த படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற கொள்கை முடிவு தான் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

இதையும் படியுங்கள்: ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும் உயிர் தப்பிக்க முடியாது.. ISIS பகிரங்க எச்சரிக்கை.

இதன் விளைவாக சென்னையில் இன்று டீசல் விலை 1 லிட்டர் 98 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, தேனி, திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 1 லிட்டர் டீசல் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் தமிழ்நாடு முழுவதும் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளான 7-5-2021 அன்று  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாய் 15 காசுகள், டீசல் விலை 86 ரூபாய் 65 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாய் 1 காசுக்கும், டீசல் விலை 98 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது திமுக ஆட்சி பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட பின்னரும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 86 காசாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 12 ரூபாய் 27 காசாகவும் உயர்ந்துள்ளது. 

கடந்த 10 நாட்களில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 15 காசாகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அன்றாட டீசல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாடு அரசிற்கும் மதிப்பு கூட்டு வரி மூலமாக வரும் வருவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன். டீசல் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர்நாடியாக விளங்குகிறது. டீசல் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தின் தொடர்  விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். பெரும்பாலும் டீசலில் ஓடும் வாகனங்கள் மூலம்  பொருட்கள் ஆங்காங்கே எடுத்துச் செல்லப்படுவதால், அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அனைத்து பொருட்களின் விலை என்பது டீசல் விலை உயர்வு பின்னிப்பிணைந்துள்ளது. அன்றாடம் ஏறிக்கொண்டே வரும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களான, அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் இதர மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றின் விலையும் விஷம் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இதையும் படியுங்கள்: கட்சி இனி வளரும்னு நம்பிக்கை இல்ல.. துரோகிகளே பாமகவில் இருந்து விலகிவிடுங்கள்.. நெருப்பாக கொதித்த ராமதாஸ்.

தற்போது கொரோனா போன்றவற்றின் தாக்கம் குறைந்து அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயல்பாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்ற நிலையில் தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ மாணவியர், அலுவலகங்களுக்குச் செல்வோர், சுற்றுலாப்பயணிகள், ஏழை எளிய நடுத்தர பிரிவினர் என அனைவரும் கூடுதல் சுமைக்கு தினந்தோறும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதேபோன்று பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும் தொழில் முனைவோரும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய நிலையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை ஓரளவு குறைக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி டீசல் விலையை குறைப்பதுதான்.

எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் டீசல் மூலம் அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்லும் மதிப்பு கூட்டு வரி வருவாயை கருத்தில் கொண்டு டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும், மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தைக் கொடுத்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியையும், மத்திய அரசின் வருவாயையும், ஓரளவு குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

click me!