பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்யவில்லையா.. பதறாதீர்கள்.. அறிய வாய்ப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 12, 2020, 1:03 PM IST
Highlights

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பிற சிரமம் ஏற்பட்டது.
 

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை,  பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் வழி செய்கிறது. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றுகள் ஆகும், பிறப்புச் சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்காக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. 

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டு இருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடமளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம், 12 மாதத்திற்கு பின் குழந்தையின் பெயரினை 15 வருடங்களுக்குள் உரிய கால தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம், திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2000 படி 1-1-2008 முன் பிறந்த குழந்தைகளுக்கு 31-12-2014 வரை பெயர் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்ட கால அளவு முடிவுற்ற பின்னும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31-12-2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்தது.  

அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31-12-2019 உடன் முடிவுற்ற நிலையில், பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பிற சிரமம் ஏற்பட்டது.பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கலைந்திட, 1-1-2008 முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது, எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம், பெயரினை பதிவு செய்ய கிராம ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சியில் செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர், கண்டோன்மெண்ட் பகுதியில் துப்புரவு ஆய்வாளர், நகராட்சி, மாநகராட்சிகளில் துப்புரவு ஆய்வாளர், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சுகாதார ஆய்வாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும், இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற்றிடுவீர். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!