அதானி, அம்பானி பொருட்களை புறக்கணிக்க இயக்கம்.. விவசாயிகளுக்கு ஆதரவாக காம்ரேட்கள் திட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 12, 2020, 11:47 AM IST
Highlights

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: 

மூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 9 அன்று, 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தபோது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது. 

டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில விவசாயிகள் டில்லியை நோக்கி புறப்பட வேண்டுமென்றும், அதே தேதியில் இதர மாநிலங்களில் ஆதரவு இயக்கம் நடத்திட வேண்டுமென்றும் அறைகூவல் வந்துள்ளன.கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லி மாநகரத்தை முற்றுகையிட்டு உறுதியாக தொடர்ந்து போராடுகிற போது அப்போராட்டத்தை ஆதரிக்கின்ற அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல வடிவங்களில் இயக்கங்கள் நடத்திட வேண்டுமென விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் டிசம்பர் 14ந் தேதியன்று காத்திருக்கும் போராட்டத்தை துவக்குகிறார்கள். அகில இந்திய விவசாய சங்கத்தின் கூட்டமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் நாடு முழுவதும் அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டிசம்பர் 14ந் தேதியன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ விற்பனை கடைகள் முன்பு ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. 

தேசம் காக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடக்கக் கூடிய “அதானி, அம்பானி பொருட்களை புறக்கணிக்கும்” இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!