
தாய் சரளாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட தஷ்வந்த், தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி பாபு என்பவரின் மகளான ஹாசினி என்கிற 7 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தான்.
பின்னர் நகைக்காக பெற்ற தாயையே கடந்த வாரம் கொலை செய்துவிட்டு அவன் மும்பைக்கு தப்பிச் சென்றான். அங்கு சென்ற தனிப்படை போலீசார், கடந்த 6ம் தேதி தஷ்வந்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மும்பை பாந்தாரா நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்திவிட்டு, சென்னை அழைத்துவரும் முன்னதாக ஹோட்டலில் உணவருந்திய போது, கழிவறை சென்றுவருவதாகக் கூறி கைவிலங்கை அகற்ற சொல்லியுள்ளான். போலீசார் கைவிலங்கை அகற்றிய மாத்திரத்தில், மின்னல் வேகத்தில் தஷ்வந்த் தப்பிவிட்டான். அப்போது தஷ்வந்தைப் பிடிக்க முயன்ற குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இதனிடையே போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற தஷ்வந்த்தை பிடிக்க சென்னையைச் சேர்ந்த மற்றொரு தனிப்படை போலீசார் மும்பை சென்று, மும்பை போலீசாரின் உதவியுடன் மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தமிழக போலீசார் கைது செய்தனர்.
மும்பையிலிருந்து இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்ட தஷ்வந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தாய் சரளாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட தஷ்வந்த், பணம் தராததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.