முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு... யாருக்கு எந்தெந்த துறைகள் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 11, 2021, 7:11 PM IST
Highlights

அதேபோல் அதிகாரிகள் மாற்றம், நியமனத்திலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறார். 

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா நெருக்கடி காலத்தில் தன்னுடைய அரசை திறம்பட நடத்த திட்டமிட்டு வருகிறார். பதவியேற்ற முதல் நாளே கொரோனா நிவாரணத் தொகை ரூ.4000. அதில் இந்த மாதமே ரூ.2000 வழங்க வேண்டும், அரசின் சாதாரணப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை செலவை அரசே ஏற்கும், பால் விலை ரூ.3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கு தனித்துறை என 5 திட்டங்களை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் அதிகாரிகள் மாற்றம், நியமனத்திலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறார். தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் என பல அதிகாரிகளை மாற்றிய போதும், கொரோனா நெருக்கடி நிலை பற்றி நன்கு அறிந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாமல் இருந்ததற்காக உயர் நீதிமன்றமே ஸ்டாலினுக்கு சபாஷ் போட்டது. 

அதேபோல் முதலமைச்சருக்கான தனிச்செயலாளர்கள் நியமனத்திலும் அதிரடி காட்டினார். முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் நேர்மையாகவும், திறமையாகவும் இயங்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். அதில், உதயந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். 

இந்த 4 பேருக்கும் தற்போது துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி உதயச்சந்திரனுக்கு உள்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனு ஜார்ஜுக்கு விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், சமூக நலம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளும், உமாநாத்திற்கு போக்குவரத்து, நிதி, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளும், சண்முகத்திற்கு வருவாய், சட்டம்,  முதல்வர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வேளாண் உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 


 

click me!