​மதிமுகவிலும் இருக்கிறது ஜனநாயகம்... இளையவருக்கு பொறுப்பு வழங்கி நிரூபித்த வைகோ..!

By Thiraviaraj RMFirst Published Jan 3, 2022, 1:11 PM IST
Highlights

இந்நிலையில் அவர்களை எல்லாம் சரிக்கட்டும் வகையில்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளராகப் பதவிவகித்தவர் ப.த.ஆசைத்தம்பி. 

வைகோ மகன் துரை வையாபுரி மதிமுக தலைமை நிலைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அந்தக் கட்சியில் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது. வெளிப்படையாக பூசல் இல்லை என்று காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் கணன்று கொண்டிருக்கிறார்கள் நிர்வாகிகள்.

துரை வைகோ மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் மதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியடைந்தனர். வைகோ மகனுக்கு மகுடம் சூட்டும் விழாவில், மாவட்டச் செயலாளர் திருவள்ளூர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், திண்டுக்கல் செல்வராகவன், புதுக்கோட்டை சந்திரசேகர், சிவகங்கை புலவர் செவந்தியப்பன், திருப்பூர் ஆர்.பி. மாரியப்பன் நாமக்கல் டி.என்.குருசாமி, விருதுநகர் ஆர்.எம்.சோமசுந்தரம், காஞ்சி வளையாபதி, நாகை ஏ.எஸ்.மோகன் ஆகியோர் கூட்டத்துக்கு வரவில்லை.

மல்லை சத்யா தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதுவரை மல்லை சத்யா, துரை வைகோவின் வருகையை ஆதரித்துப் பேசவில்லை. சமூக வலைதளத்தில் எழுதவில்லை. செய்தியாளர்கள் கேட்டும் பேட்டிக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

கோவை மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு, துரை வைகோவுக்குப் பொறுப்பு அளிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி வெளிநடப்பு செய்துவிட்டார். துரை வைகோவை கட்சிக்குள் திணிப்பதில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு உடன்பாடு இல்லை. ஆகவே அவர் அன்று நடந்த கூட்டத்தைப் புறக்கணிப்பு செய்துவிட்டார். ம.தி.மு.க., உயர்நிலை குழு உறுப்பினரும், நாமக்கல் மாவட்டச் செயலருமான டி.என்.குருசாமி, கூட்டத்திற்கு வரவில்லை. இதனால், அவரிடமிருந்த மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது.

 

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து மதிமுக திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி-யாக இருக்கிறார். வைகோ திமுக எம்.எல்.ஏ.க்களால் ராஜ்ய சபா எம்.பி.-யாக தேர்வு செய்யப்பட்டு எம்.பியாக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. வைகோ தொடர்ந்து, திமுக ஆதரவாளராக தொடர்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான், துரை வைகோ மதிமுக தலைமை நிலையச் செயலாளராக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சில மதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மீண்டும் தாய்க் கழகம் திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்புபவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

இது குறித்து அக்கட்சியினிரிடம் பேசினோம், ‘’ மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர் என்பது உண்மைதான். அவர்கள் 28 ஆண்டுகளாக வைகோவுக்காகவும் அவருடைய கொள்கை உறுதிக்காகவும் ஆதரவாக நின்றார்கள். பொடா சட்டத்தில் வைகோவுடன் 19 மாதங்கள் சிறையில் இருந்தார்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையாக எதிர்த்த வாரிசு அரசியலை இப்போது தலைமையே வாரிசு அரசியல் செய்வதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்களை எல்லாம் சரிக்கட்டும் வகையில்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளராகப் பதவிவகித்தவர் ப.த.ஆசைத்தம்பி. இவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்தவர். இந்த அறிவிப்பை மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சாதரணமானவர்களுக்கும் மதிமுகவில் இடமுண்டு என காட்டிக் கொள்வதற்காக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!