டெல்லி அவசர அழைப்பு..! அண்ணாமலை தலைவர் பதவிக்கு ஆபத்து..!

By Selva KathirFirst Published Sep 3, 2021, 12:00 PM IST
Highlights

காதும் காதும் வைத்தது போல் முடித்திருக்க வேண்டிய கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு முதல் காரணம் அண்ணாமலை தான் என்பது போன்று தகவல்கள் பாஜக மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

கே.டி.ராகவன் வீடியோ வெளியான சில நாட்களிலேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்த நிலையில் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக்கழித்து வந்த அவர் தற்போது திடீரென புறப்பட்டுச் சென்றுள்ளார்.

காதும் காதும் வைத்தது போல் முடித்திருக்க வேண்டிய கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு முதல் காரணம் அண்ணாமலை தான் என்பது போன்று தகவல்கள் பாஜக மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதிலும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் தலைவர் பதவிக்கு அண்ணாமலை அன்பிட் என்கிற ரீதியில் டெல்லி பாஜக தலைமையகத்திற்கு அவசரமாக கடிதம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். இதே போல் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரும், கடந்த காலத்தில் செல்வாக்கில் இருந்த முன்னணியினர் சிலரும் கூட அண்ணாமலைக்கு எதிராக டெல்லி பாஜக தலைமைக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர்.

தலைவர் பதவிக்கான முக்கிய குணாதிசியமான பொறுமை துளியும் அண்ணாமலையிடம் இல்லை, தற்போதும் அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி போலத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை தலைவர் பதவியில் வைத்திருப்பது ஆபத்து என்கிற ரீதியில் அந்த கடிதங்களில் வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக சொல்கிறார்கள். இதே போல் கே.டி.ராகவன் வீடியோ வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு இருந்து வந்த ஆதரவு முற்றிலும் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் அவரது அமெச்சூர் தனமான செயல்பாடுகள் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்திற்கு பிறகு கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாமல் அண்ணாமலை தவிர்த்து வருகிறார். கடைசியாக அவர் மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பினார். இதனிடையே ராகவன் வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணைக்கு கடந்த சில நாட்களாகவே டெல்லி மேலிடம் அண்ணாமலையை அழைத்து வருகிறது. ஆனால் அதற்குள் மதனிடம் உள்ள வேறு வீடியோக்களில் உள்ள பெண்களை தொடர்பு கொண்டு அந்த வீடியோ வெளியாகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பணியில் அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த பணிகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் அண்ணாமலை. அதாவது ராகவன் வீடியோ விவகாரத்தை சரி செய்துவிட்டதாக ரிப்போர்ட்டுன் அவர் சென்றுள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் அண்ணாமலையின் விளக்கத்தை பாஜக மேலிடம் ஏற்பது மிக மிக கடினம் என்கிறார்கள். அண்ணாமலைக்கு இந்த பதவி கிடைக்க முழுக்க முழுக்க அமித் ஷா மட்டுமே காரணம். வேறு எந்த பக்கத்தில் இருந்தும் அண்ணாமலைக்கு தற்போது ஆதரவு கிடைக்காது என்கிறார்கள். தமிழக பாஜக நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக அண்ணாமலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இந்த சூழலில் அமித் ஷா தொடர்ந்து அண்ணாமலையை ஆதரிப்பாரா? என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். எனவே டெல்லியில் விசாரணை முடிந்து அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தான் அடிக்கடி தான் பாஜகவின் கடைக்கோடி தொண்டன் என்கிற ரீதியில் ட்வீட்டுகளை அடுத்தடுத்து தட்டி வருகிறார். அதே சமயம் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மூலமாக தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அண்ணாமலை காய் நகர்த்துகிறார் என்றும் சொல்கிறார்கள்.

டெல்லியில் தற்போது சிடி ரவி புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு செல்வதாக கூறிவிட்டே அண்ணாமலை டெல்லி பறந்துள்ளார். எனவே தமிழக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா? மாட்டாரா? என்கிற திக் திக் நிமிடங்கள் கமலாலயத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.

click me!