
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது அண்ணன் மகள் தீபா தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதையொட்டி தமிழகம், கர்நாடகா, புதுவையில் தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளன. இதில், புதுவையில் அகில இந்திய அம்மா ஜெ தீபா பேரவை என உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று காலை வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த்து. புதுவை தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜி.டி.சேகர் தலைமை தாங்கினார். அகில இந்திய அம்மா தீபா பேரவை அமைப்பாளர் கோட்டை பாபு, ஒருங்கிணைப்பாளர் கர்ணா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் புதுவையின் 23 தொகுதிகளில் இருந்து தீபாவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதி தீபா அரசியல் கட்சி தொடங்குகிறார். அவருக்கு ஆதரவளித்து, அன்றைய தினம் ஜெயலலிதா பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும், தீபா பேரவையில் உறுப்பினர்கள் சேர்க்கயும் தீவிரம் அடைந்துள்ளது. அதில் நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தினர்.