திமுக அரசு முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டது. தற்போது தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடைபெற்றுவருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஹெச்.ராஜா பரமக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக ஆட்சி முதல் 90 நாட்களிலேயே ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டது. அடுத்து வர இருக்கிற ஆறு மாதங்களில் 92 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாகவும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். தற்போது கடன்கார ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது. எப்போதுமே நிதி பற்றாக்குறை பண வீக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் நிதி அமைச்சர் அகவிலைப்படியை கொடுக்க முடியாது.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தகுதியானவர்களை பார்த்து கொடுப்போம் என்று கூறுகிறார். 1967-ஆம் ஆண்டில் கூறிய அதே ஏமாற்றுத்தனத்தை மீண்டும் திமுகவினர் செய்கிறார்கள். அப்போது, மூன்று படி அரிசி கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த மறுநாள், மூன்று படி லட்சியம் ஒரு படி அரிசி நிச்சயம் என்று கூறினார்கள். அதுவும் சென்னையில் ஒரே ஒரு ரேஷன் கடையில் மட்டும்தான் கொடுத்தார்கள்.
வருவாயில் 30 சதவீதத்துக்கு மேல் கடன் வாங்கினால் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும்? அரசின் வருவாயில் 70 சதவீதம் வருமானம் சம்பளத்துக்கும் பென்ஷனுக்கும் போகிறது. மீதியுள்ள 30 சதவீத வருமானத்தில் வட்டியைக் கட்டுவதா, கடனை திருப்பிக் கொடுப்பதா? கடன் வாங்குவது தவறில்லை. திருப்பி செலுத்தும் அளவுக்கு ஏற்ப கடன் வாங்க வேண்டும். 2006-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் கடன் ரூ.28,000 கோடியாக இருந்தது. கலர் டிவி கொடுக்கிறேன் என்று ஆரம்பித்து, இலவசங்களால் 5.77 லட்சம் கோடி கடனில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்.பொறுப்போடு அரசாங்கம் செயல்படவில்லை என்றால், தமிழகம் நாளை கடன் வாங்கும் தகுதியையே இழந்துவிடும்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.