தமிழக அரசின் ஊழல் பற்றி பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதியே இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
அதிமுக இரு அணிகள் இடையே கடும் பனி போர் நடந்து வருகிறது. ஒருபுறம் அமைச்சர்கள், ஓபிஎஸ் அணியினர் மீது குறை கூறுவதும், ஓபிஎஸ் அணியினர் அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டுவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த வேளையில் கடந்த 2 நாட்களுக்கு முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசில் ஊழல் இருப்பதாக மக்களே கூறுகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சி.வி.சண்முகம், தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது.
தமிழக அரசில் ஊழல் இருக்கிறது என மக்களே கூறுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். ஊழலை பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
முதலில் அவரது உடலில் உள்ள அழுக்கை போக்கிவிட்டு, பிறகு மற்றவர்களின் உடம்பில் உள்ள அழுக்கை போக்குவதற்கு அவர், அறிவுரை சொல்லட்டும். குற்றஞ்சாட்டட்டும் என்றார்.