ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவது! ஆட்சிக்கு வந்து விட்டால் மூடி மறைப்பது திமுகவின் வாடிக்கை!-ஓபிஎஸ்

Published : Apr 26, 2022, 09:57 AM ISTUpdated : Apr 26, 2022, 10:01 AM IST
ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவது! ஆட்சிக்கு வந்து விட்டால் மூடி மறைப்பது திமுகவின் வாடிக்கை!-ஓபிஎஸ்

சுருக்கம்

 காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த  விக்னேஷ் என்பவரின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றவும் தமிழக  அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இளைஞரை அழைத்து சென்ற காவல்துறை

ஆட்சிக்கு வருவதற்காக மக்கள்மீது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வதும், போலி வாக்குறுதிகளை அளிப்பதும், சிறிய சம்பவங்களை பெரிதாக்குவதும், சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவதாக கூறுவதும், ஆட்சிக்கு வந்த பிறகு பிறர் மீது பழி போடுவதும், ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று சாக்குபோக்கு சொல்வதும், மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதும் தி.மு.க.விற்கு கைவந்த கலை. அண்மையில், புரசைவாக்கம், கெல்லீஸ் அறிவிப்புக்குறி அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த திரு. சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த திரு. விக்னேஷ் ஆகியோரை மடக்கியதாகவும், அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக தெரிவித்து அவர்களை தலைமைச் செயலக குடியுருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும். அதன்பின் ரகசிய இடத்திற்கு கூட்டிச் சென்று அடித்து சித்ரவதை செய்ததாகவும், இந்த சித்ரவதையில் குதிரை ஒட்டி பிழைப்பு நடத்தி வந்த ஏழை இளைஞன் திரு. விக்னேஷ் மறுநாள் வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏற்பட்ட இந்த உயிரிழப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

திரு. விக்னேஷ் அவர்களின் குடும்பத்தாருக்கு விக்னேஷ் அவர்களுக்கு பணி கொடுத்தவர் ஒரு இலட்சம் ரூபாய் ஈமச் சடங்கிற்காக கொடுத்ததாகவும், இந்தப் பணத்தை காவல் துறையினர் அளித்ததாகவும் அவர் திரு. விக்னேஷ் அவர்களின் சகோதரரான திரு. வினோத் அவர்களிடம் கூறி இருப்பதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. மேற்படி சம்பவத்தில் காவல் துறையினர் சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படுகிறது என்றால், அங்கே காவல் துறையினர் தவறு புரிந்திருக்கிறார்கள் என்றுதான் அதற்குப் பொருள். 'மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்' என்பதற்கேற்ப காவல் துறையின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. இதன்மூலம், அந்த இளைஞனின் மரணத்திற்கு காவல் துறையினர்தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்துவிட்டால், மூடி மறைப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை. அந்த வகையில், மேற்படி சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. இதில் தொடர்புடைய காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு குற்றப் பிரிவு குற்றப் புலானாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டு இருந்தாலும், இந்தத் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால், தங்களுக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருதுகின்றனர்.

சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்

திரு. விக்னேஷ் அவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை, அதாவது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்த போது மரணமடைந்த திரு. விக்னேஷ் அவர்களின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

நீட் மசோதா; போஸ்ட்மேன் வேலையைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருக்கு அழகல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சரவெடி..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!