முந்திரி தொழிலாளி கொலை வழக்கு.. கடலூர் திமுக எம்.பி. ரமேஷ்க்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்..!

By vinoth kumarFirst Published Oct 13, 2021, 12:47 PM IST
Highlights

கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி அதில் பணியாற்றி வந்த கோவிந்தராசு (55) என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

முந்திரி தொழிற்சாலை ஊழியர் கோவிந்தராஜ் கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி ரமேஷ்க்கு 1 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி அதில் பணியாற்றி வந்த கோவிந்தராசு (55) என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பின்னர் அதன் பிரேத பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் பாமக உள்ளிட்ட கட்சிகள் திமுக எம்.பி. தான் கொலைக்கு காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், முந்திரி தொழிற்சாலையில் திருடுபோனதாகவும், அப்போது அது குறித்து போலீசில் புகார் கூறாமல் எம்.பி ரமேஷ் உள்ளிட்டோர் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். 

இந்நிலையில் கடலூர் எம்.பி. ரமேஷ் அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜன், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். இதனிடையே, தலைமறைவாக இருந்து வந்த திமுக எம்.பி.ரமேஷ் 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

தற்போது 2 நாள் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கடலூர் சிறையில் இருந்த எம்.பி ரமேஷ் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 2 நாட்கள் காவில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி கோரிய நிலையில் ஒருநாள் மட்டும் காவில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

click me!