
புதுச்சேரி சட்ட்ப் பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த், ஆளுநர் கிரண் பேடியை வெகுவாக புகழ்ந்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், அவருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 16-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, 17-ஆம் தேதி ஜிஎஸ்டி சட்ட முன்வடிவு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மே 18 முதல் 23 வரை பேரவை அலுவல் நடைபெறாதென்றும், மே 24-இல் மீண்டும் அவை கூடும் என்றும் சட்டப் பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் அறிவித்திருந்தார்.
அதன்படி புதுவை சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எம்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் அனந்த், ஆளுநர் கிரண் பேடியை மிகவும் புகழ்ந்து பேசினார்.
இதையடுத்து அவருக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சட்டப் பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் கிரஷ் பேடியை விமர்சனம் செய்தோ அல்லது அவர் குறித்து விவாதிப்பதோ வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து எம்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில்ருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்லையில் நாளை 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் மீதான விவாதங்கள், பின்னர், துறை ரீதியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். வருகிற ஜூன் 16-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.