
கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் அரசியல் ஆளுமைகளுக்கு முன், தமது அரசியல் பிரவேசம் வேண்டாம் என்று முடிவெடுத்த ரஜினி, தற்போது அரசியலில் இறங்க உறுதியாக முடிவெடுத்து விட்டார் என்றே அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
அவர், பாஜகவில் சேரவில்லை என்பது, மோடி, அமித் ஷா போன்ற தலைவர்களுக்கு ஒரு வருத்தம் என்றாலும், ரஜினி ஆரம்பிக்கும் கட்சியை, தமது கூட்டணிக்கு கொண்டுவந்து விடலாம் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இல்லை.
இந்நிலையில், தாம் தனி கட்சி தொடங்கப்போகும் விஷயம் குறித்து மோடிக்கு தெரிவிக்கவும், அவரிடம் இருந்து சில ஆலோசனைகளை பெறுவதற்காகவும், அடுத்த மாதம் முதல் வாரத்தில், டெல்லி சென்று பிரதமரை சந்திக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம் என்பதே, ரஜினியின் திட்டமாக உள்ளது. அதற்காகவே, ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டவர்களை அவர் பாராட்டினார் என்றும் கூறப்படுகிறது.
பிரதமரிடம் கூட, தமது ரசிகர்கள் தனி கட்சி தொடங்க வேண்டும் என்று விரும்புவதால், பாஜகவில் சேர வில்லை. மற்றபடி, பாஜக மீது தமக்கு வெறுப்பு இல்லை என்றும், சந்திப்பின்போது மோடியிடம் விளக்க இருக்கிறாராம் ரஜினி.
எதிர்ப்பு இல்லாமல் வளர்ச்சி இல்லை என்று, ரசிகர்கள் முன்பாக மேடையில் பேசிவிட்டு, யாரையும் பகைத்து கொள்ள கூடாது என்று, ரஜினி சொல்வது விந்தையாக இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஒரு வேளை, ரஜினி தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடும்போது, எதிர்ப்பு என்பது தாமாகவே வரும், அந்த எதிர்ப்பை, அவர் எப்படி சமாளிப்பார்? என்றும் கேள்வி எழுந்துள்ளது.