மாவட்ட கலெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு வாகனத்திற்கு பாஸ் வழங்கியவரை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீஸ்.இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
T.Balamurukan
மாவட்ட கலெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு வாகனத்திற்கு பாஸ் வழங்கியவரை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீஸ்.இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ,ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. தேவையில்லாமல் வெளியில் சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரச தேவைகளுக்காக கூட வெளியில் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் கூறிய நிலையில், அரசு பொதுமக்களின் நிலமையை கருத்தில் கொண்டு அவசர,அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், துக்கம் நிகழ்வுக்கு வெளியூர்களுக்கு செல்ல கட்டுபாடுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெளிமாவட்டங்கள் செல்வோர் தாங்கள் செல்லும் காரணத்தை கூறி வாகன அனுமதிசீட்டு பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
வெளியூர் செல்ல பாஸ் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திருவிழாக்கூட்டம் போல் குவிந்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் முண்டியடித்து பாஸ் வாங்க முடியாதவர்களை போலி ஏஜென்ட்கள் போலி பாஸ்களை சில ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அப்படியொரு சம்பவம் தான் இராமநாதபுரத்தில் அரங்கேறியிருக்கிறது.
போலி பாஸ் பிடிபட்டது எப்படி? என விளக்குகிறார் வருவாய்துறை அதிகாரி ஒருவர்.
"இராமநாதபுரம் மாவட்டம். கீழக்கரை சேர்ந்த 'நைய்னா முகம்மது' என்பவர் கீழக்கரையில் ஸ்டுடியோ நடத்தி வரும் சங்கர் என்பவரிடம் சென்னை செல்ல வாகன அனுமதி அட்டை வாங்கி தரவேண்டும் என கூற சங்கரோ,சென்னை சென்று வர ஒரு அனுமதி அட்டைக்கு 4500 வீதம் 20க்கும் மேற்பட்ட கார்களுக்கு போலியாக வாகன அனுமதி சீட்டு தயாரித்து ஆட்சியரின் போலி கையெழுத்துடன் வழங்கியுள்ளார். வாங்கிய அப்பாவி பொதுமக்கள் உண்மையென நம்பி சென்னை சென்று திரும்பி வரும் போது மாவட்ட எல்லையான பார்த்திபனூர் செக்போஸ்ட் அருகே சுகாதாரதுறையினரின் சோதனையின் போது TN.65 AB 1353 - TAVERA இந்த வாகனத்தை சோதனை செய்த போது அனுமதிசீட்டு போலியானது என சுகாதாரத்துறைக்கு தெரியவர மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ்க்கு தகவலை தெரிவித்தனர். இதனால் ஆட்சியர் கடும் கோபத்துடன் உடனடியாக அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும்,போலி பாஸ் தயாரித்தவர்கள் யாரென கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தீவிரமாக விசாரணை செய்த போது இதை கீழக்கரையை சேர்ந்த சங்கர் என்பவர் தான் ஏராளமான போலிபாஸ் தயாரித்துள்ளார் என்பதும்,அவருடன் ஒருசில உளவுபிரிவு காவல்துறையினரும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருசில அதிகாரியும் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து பார்த்திபனூர் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனால் உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் வெளி மாவட்டத்திற்க்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகள் சப்போர்ட் இருப்பதால் போலிபாஸ் தயாரித்தவர் சங்கடம் இல்லாமல் சந்தோசமாக கீழக்கரையில் உலாவருகிறாராம்.