கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுகிறது எனவும், அது கடந்த ஆண்டை விட மோசமாக இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கைமீறி சென்று விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் தலைமை நீதிபதியை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார். தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுகிறது எனவும், அது கடந்த ஆண்டை விட மோசமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைகள் எதுவும் உள்ளதா என தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கேள்வி எழுப்பினார். அதற்கு கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி விட்டதாக தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதேநேரத்தில் தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பில் உள்ளது, ஆனாலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க சுகாதாரத்துறை தான் சரியான நபர் என்பதால் அவரை நீதிமன்றத்திற்கு வர உள்ளதாக அவர் கூறினார்.
அதை ஏற்று நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இன்று பிற்பகல் சுகாதாரத் துறைச் செயலரை சந்திப்பதாக கூறினார். எனவே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து கொரோனா நிலவரம் குறித்து விளக்கமளிக்க உள்ளார்.