கொரோனா பற்றி கொஞ்சம்கூட கவலையில்ல.. 54 திருமண மண்டபங்களுக்கு ரூ. 2,08,600 ரூபாய் அபராதம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 19, 2021, 10:56 AM IST
Highlights

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு ரூ. 2,08,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு ரூ. 2,08,600 ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. 

மேலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில்,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட 2238 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு ரூ. 2,08,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மாநகராட்சி அதிகாரிகளின் கள ஆய்வின் போது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்கள், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 51 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

click me!