99 சதவீதத்திற்கும் மேலாக அட்டைதாரர்கள் தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மே 15, 2021 முதல், முதல் தவணையாக ரூ.2000/- மற்றும் ஜுன் 15, 2021 முதல் ரூ.2000/- ஆக மொத்தம் ரூ.4000/- உதவித்தொகை, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது. மேலும், அந்த ரேஷன் அட்டைதாரர்களின் முழு ஊரடங்கின்போது தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வழங்கிடும் பொருட்டு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப் பையினை ஜுன் 15ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
99 சதவீதத்திற்கும் மேலாக அட்டைதாரர்கள் தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை நிவாரணத் தொகை பெறாதோர் 31.07.2021க்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளக் வேண்டுமென தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் 31.07.202.1க்குள் பெற இயலாத, 15.06.2021 அன்றைய தேதியில் தகுதியுடன் இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 01. 08.2021 முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாயவிலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று அதன்பின் அவர்களுக்கு உரிய நியாயவிலைக் கடையிலிருந்தே வழங்கும் முறை பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டான 2021ஆம் ஆண்டு மே 10 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சற்றேறக் குறைய மூன்று இலட்சம் மனுதாரர்களுக்குக் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அப்படி புதிதாக ரேஷன் அட்டை கிடைக்கப்பெற்றவர்களும், 1.08.2021 முதல் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேசன் பொருட்களைத் தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதலால், புதிய குடும்ப அட்டைதாரர்கள் 2021 ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து இன்றியமையாப் பொருட்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டைதாரர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று தீரும் வரை முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியினைப் பின்பற்றி, அவசியத் தேவையின்றிப் பொது வெளிக்கு வராமல் தங்களையும் காத்து சமூகத்தினையும் காத்து கொரோனா தொற்றினை வென்றிடுவோம் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.