மே 31 ம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி. உயர் நீதிமன்றம்

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2021, 9:09 AM IST
Highlights

நல வாரியத்தில் மே 31 ம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நல வாரியத்தில் மே 31 ம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

இதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டாக வாரியம் செயல்படாததால், ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதால், நல வாரியத்தில் விண்ணப்பித்துள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பரிசீலிப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், நல வாரியத்தில் மே 31 ம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
 

click me!