திடீர் மூச்சுத்திணறல்.. சசிகலாவின் சகோதரர் திவாகரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

By vinoth kumarFirst Published Jun 25, 2021, 10:52 AM IST
Highlights

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டவம் ஆடியது. இதில், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சற்றே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தோன்றினாலும்,  அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என அடுத்தடுத்து கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்படுவதும், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சசிகலாவின் சகோதரரான திவாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொண்டர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக திவாகரனுக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. எனவே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்  கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திவாகரனுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

click me!