கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2-ம் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த ஜெ.அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலமாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், அன்பழகனுக்கு தற்போது ஆக்சிஜன் தேவை 29 சதவீதமாக குறைந்திருப்பதாகவும், கல்லீரல் செயல்பாடு அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இன்று காலை கண்விழித்து பார்த்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி திமுகவினர் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.