ஜெயலிதாவின் கொள்கைப்படி அதிமுக- பாஜக கூட்டணி இதுவரை இல்லை, இனியும் அமைக்காது என எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கருத்து மோதல் முற்றிக்கொண்டே வருகிறது. எடப்பாடி அரசு தலைமையேற்றதும் அதிமுகவும் மத்திய பாஜகவும் இணைந்து செயல்பட்டு வந்தது. இதனால் எதிர்கட்சிகள் எடப்பாடி அரசு பாஜகவின் பினாமி அரசாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டின. ஆனால் முதலமைச்சர் எடப்பாடியும் அமைச்சர்களும் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து அடுத்தடுத்து தமிழகத்தில் பாஜகவின் ஈடுபாடுகள் அதிகரித்து கொண்டே வந்தது. இதற்கு பதிலளித்த அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது தவறில்லை எனவும் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே அவ்வாறு உள்ளோம் எனவும் விளக்கம் அளித்தது. ஆனாலும் விமர்சனங்கள் விட்ட பாடில்லை. இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சி அதிமுகவே கவிழ்ந்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தினகரனிடம் படுதோல்வி அடைந்தது. இதைதொடர்ந்து நோட்டாவுடன் போட்டி போட்டு பாஜக படுதோல்வி அடைந்தது. அதை அதிமுகவினரே விமர்சிக்க தொடங்கினர். இதனால் கடுப்பான பாஜகவினர் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைக்குமா என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜெயலிதாவின் கொள்கைப்படி அதிமுக- பாஜக கூட்டணி இதுவரை இல்லை, இனியும் அமைக்காது என எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.