முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...!

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 6:13 PM IST
Highlights

புதுவை முதல்வர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக, புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக, புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ கூறியுள்ளார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது;- தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதை வரவேற்பதையும், எதிர்ப்பாக தீர்ப்பு வந்தால் விமர்சிப்பதையும் காங்கிரஸ் அரசு பல ஆண்டுகளாக வைத்துள்ளது. அலகாபாத் நீதிமன்றம் இந்திராகாந்திக்கு எதிராக தீர்ப்பளித்தபோது அதை எதிர்த்தனர். அன்று முதல் இதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தற்போது உச்சநீதிமன்றம் நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த தீர்ப்பை வழங்கியதாகவும், அதில் திருத்தங்களை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது. ஆனால் தீர்ப்பில் ஓட்டை உள்ளது என முதல்வராக உள்ள நாராயணசாமி கூறியுள்ளார். அவர் மீது கட்சி தலைமையின் அனுமதி பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். ஏற்கனவே சபாநாயகர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து புதுவை முதல்வரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற செயலாளர் பதவியை வைத்து கொண்டு உச்சநீதிமன்றத்தை விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரது நாடாளுமன்ற செயலாளர் பதவியை கவர்னர் பறிக்க வேண்டும். அவர் மீதும் நீதிமன்ற வழக்கு தொடரப்படும். சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுப்போம்.

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். மத்திய அரசு மீது திட்டமிட்டு பழியை சுமத்தி வருகிறார். கர்நாடகாவில் ஆட்சி செய்வது குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அந்த ஆட்சியில் அங்கம் வகிக்கும் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர்தான் அணை கட்டுவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். தொடர்ந்து அணை கட்டுவதில் உறுதியாக இருப்போம் எனவும் கூறி வருகிறார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி, அவரை சந்தித்து பேசினாலே அணை கட்டுவதை தடுக்க முடியும். ஆனால் அவர் மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி வருகிறார். இது நாராயணசாமியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தில் புதுவை மாநிலம் மத்திய அரசின் சொத்து என கூறியதை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

நமது பிள்ளையைக்கூட நாம் நமது சொத்து என்றுதான் கூறுவோம். அந்த அடிப்படையில்தான் உறவின் வலிமையை காட்ட புதுவையை, மத்திய அரசின் சொத்து என கூறியுள்ளனர். இதையறியாமல் தேவையற்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். புதுவையில் உள்ள காங்கிரஸ் அரசை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எம்எல்ஏக்களை நியமிக்கவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அதிருப்தியால் வரும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

click me!