திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை நடத்தும் ரகசியமாக சந்தித்து பேசியதாக திமுக புகார் கூறியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ரகசியமாக சந்தித்து பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பரபரப்பு புகார் ஒன்றை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினியிடம் அளித்தார்.
இதுதொடர்பாக இனிகோ இருதயராஜ் கூறுகையில், “திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏப்ரல் 26 அன்று தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை அவருடைய அலுவலக அறையில் தனியாகச் சந்தித்து 30 நிமிடங்கள் பேசியுள்ளார். அந்த அறையில்தான் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இருவரும் பேசியபோது அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இருவரும் ரகசியமாகப் பேசியுள்ளனர். இது சந்தேகத்தை எழுப்புகிறது. இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.
தபால் வாக்குகள் முறையாக வைக்கப்பட்டுள்ளனவா என்று சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவரும் கூறியுள்ளார். தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் என்றால், எல்லா வேட்பாளர்களையும் அழைத்து கூட்டம் நடத்துவதுதான் வழக்கம். ஆனால், தொகுதி அமைச்சர் தேர்தல் நடத்தும் அதிகாரியை ஏன் தனியாகச் சந்தித்து பேசினார் என்று தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்” என்று இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.