ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் இருக்குதாம்! நல்ல முடிவு எடுக்கிறேன் சொல்லி இருக்காரு! அமைச்சர் ரகுபதி

By vinoth kumarFirst Published Dec 1, 2022, 12:32 PM IST
Highlights

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காததால்  அவசர சட்டம் காலாவதியானது. 

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் பதிலளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது இதனை தடை செய்ய வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காததால்  அவசர சட்டம் காலாவதியானது. 

இதனால், பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்  அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக இன்று தமிழக ஆளுநரை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து ஆன்லைன் ரம்மி தொடர்பாக விளக்கமளித்து சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதனையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ;- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான அரை மணி நேரத்துக்கு மேல் விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன். ஆப்லைனில் விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆப்லைனில் சூதாட்டம் விளையாடி இதுவரை யாரும் தற்கொலை செய்யவில்லை.

ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வரும். ஏற்கனவே உள்ள சட்டங்கள் மூலமாக சூதாட்டங்களை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றது. மசோதா பரிசீலனையில் இருக்கிறது. ஐயங்கள் தீர்ந்ததும் ஒப்புதல் தருவதாக ஆளுநர் கூறினார் என அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். 

click me!