சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், பக்தவச்சலம், காமராஜர் ஆட்சி காலத்தில் அவர்களின் கார் ரோட்டில் வரும் நேரத்தில் சைரன் ஒலிப்பார்கள்.
முதலமைச்சர் வரும்போது காரில் சைரன் ஒலியை நிறுத்திய விவகாரத்தில், வரலாறு தெரியாமல் அமைச்சர் துரைமுருகன் பேச வேண்டாம்' என, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், பக்தவச்சலம், காமராஜர் ஆட்சி காலத்தில் அவர்களின் கார் ரோட்டில் வரும் நேரத்தில் சைரன் ஒலிப்பார்கள். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சைரனை ஊதினார்கள். இதனைப் பார்த்த கலைஞர், இதை எதுக்குய்யா ஊதிறீங்க. கடைசிகாலத்துல ஊதுவாங்க என நிறுத்தச் சொல்லி விட்டதாக கூறி இருந்தார்.
சட்டசபை கூட்டத் தொடரில், காமராஜரை பற்றி, அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, ‘’துரைமுருகன் வயதில் முதிர்ந்தவர். அனுபவமிக்கவர். அவர், காமராஜர் பற்றி கூறியது வருத்தம் அளிக்கிறது. காமராஜர் போன்ற எளிமையான முதல்வரை உலகமே பார்த்ததில்லை. காமராஜரை பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும்.
காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், 'நான் என்ன வெளிநாட்டிலா இருக்கிறேன்... வாகனத்தில் செல்லும் போது எனக்கு எதுக்கு சைரன் ஒலி எழுப்ப வேண்டும்?' எனக் கூறி, 'சைரன்' ஒலிப்பானை நிறுத்தியவர் காமராஜர். ஆனால், 'காமராஜர், பக்தவச்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி' என, துரைமுருகன் தவறாக கூறியிருக்கிறார். துரைமுருகன் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். காமராஜரை காங்கிரஸ் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களும் நேசிக்கின்றனர். துரைமுருகன் தான் பேசியதை திரும்ப பெற வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.