2ஜி வழக்கின் தீர்ப்பு.. என்ன சொல்கிறார்கள் தேசிய தலைவர்கள்..?

Asianet News Tamil  
Published : Dec 21, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
2ஜி வழக்கின் தீர்ப்பு.. என்ன சொல்கிறார்கள் தேசிய தலைவர்கள்..?

சுருக்கம்

congress national leaders opinion about 2G scam verdict

நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக 2ஜி முறைகேடு இருந்துவந்தது. இந்நிலையில், அந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாக கூறி அனைவரையும் நீதிபதி ஷைனி விடுவித்துள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம், திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தங்களின் மீதான ஊழல் கறைகளை துடைத்து சுத்தமானவர்கள் என தங்களை நிரூபித்து விட்டதாக குதூகலிக்கின்றனர். திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் இந்த தீர்ப்பை கொண்டாடிவருகின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் நியாயம் வென்றுவிட்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் கூறிய கருத்துகளை பார்ப்போம்.

2ஜி முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தபோது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். 2ஜி முறைகேடு குற்றச்சாட்டால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

மன்மோகன் சிங் - முன்னாள் பிரதமர்

இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து எனது தலைமையிலான அரசின் மீது பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தீர்ப்பின் மூலம் பொய் பிரசாரங்களுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.

ப.சிதம்பரம் - முன்னாள் மத்திய நிதியமைச்சர்

2ஜி வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது கூறப்பட்ட மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டு உண்மையில்லை, தவறானது என இன்றைய தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

கபில் சிபல் - முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர்

2ஜி முறைகேடு புகாருக்குப் பிறகு ஆ.ராசா கவனித்து வந்த தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தை நான் தான் கவனித்தேன். அந்த துறையின் அமைச்சரானதும், 2ஜி முறைகேடு புகார்கள் குறித்து விசாரித்தேன்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டது போல எந்தவிதமான தவறுகளும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. இந்நிலையில், 2ஜி வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கிறேன். காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டு தவறானது என்பது இன்றைய தீர்ப்பின் மூலம் தெளிவாகிறது.
 

PREV
click me!

Recommended Stories

30 ஆண்டுகளாக அதிமுகவுக்கு தண்ணீர் காட்டும் ஒற்றை தொகுதி..! சக்கரபாணியின் 'சிக்ஸர்' சாதனை..
அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!