
கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, சிங்கப்பூர் பிசியோ தெரபி நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா காலமானார்.
முன்னதாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவரது புகைப்படம் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதைதொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில், ஓ.பி.எஸ். அணியில் உள்ள மனோஸ் பாண்டியன், ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் உள்ளது.
அவரது மறைவுக்கு காரணமான குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என செய்தியாளர்களிடம் கூறினார். இவரது பேச்சு, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் பீலே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சிகிச்கைக்காக அழைத்து வந்தபோது, ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என கூறினார்.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று தமிழக அரசிடம், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த அறிக்கையை ஒப்படைத்தது.
இதில், கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, மயக்க நிலையில் இருந்தார் என குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அடிக்கடி நாளிதழ்களில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, இரு தரப்பும் ஆலோசனை நடத்துவதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், ரிச்சர்ட் பீலே நினைவோடு இருந்தார் எனவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் கூறுகின்றனர். இவர்களின் முரண்பாடான தகவலால், அரசியல் கட்சியனருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் எழுந்துள்ளது.