இந்து தீவிரவாதம் குறித்து பேசியதற்காக கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி மீது சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அரவக்குறிச்சித் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்துப் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் விஷத்தைக் கக்குகிறார் என்றும் அவரது நாக்கை அறுக்க வேண்டும் என பேசினார். அமலும் கமலுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா ? அந்த அமைப்பிடம் இருந்து கமல் பணம் எதுவும் பெற்றாரா ? என்பது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் பேச்சுக்கு திருமாவளவன், கி,வீரமணி, நடிகர் கருணாஸ் போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாக்கை அறுக்க வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..