அமைச்சர் வேலுமணி மீதான புகார்... லோக்ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசு தகவல்!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2021, 6:01 PM IST
Highlights

பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் தனியாக வழக்கு தொடர்ந்த்திருந்தார்
 

அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு புகார் அளித்திருந்தார்.

அதேபோல, கொரோனா காலத்தில் மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் அப்பாவு புகார் அளித்திருந்தார்

இந்த இரு புகார்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களை பொதுத்துறை செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்பு துறை அனுப்பி உள்ளதாக குற்றம்சாட்டி, ஆளுநரின் ஒப்புதலை பெற்று வழக்கு பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளை தொடர்ந்திருந்தார். அதே போல, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் தனியாக வழக்கு தொடர்ந்த்திருந்தார்

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சித் துறை அமைச்சர் மீதான புகார் குறித்து லோக்ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், உணவுத்துறை அமைச்சர் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச்செயலாளர் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால் புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்குகளில், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 5 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

click me!