
அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது அரக்கோணத்தில் 2 காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். சபாநாயகர் தனபாலை மரியாதைக் குறைவாக பேசியதாகக் கூறி இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் கடந்த 9 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, சபாநாயகரும் இந்த நாட்டின் குடிமகன்தான். பேரவைக்குள் வேண்டுமானால் அவருக்கு அதிகாரம் இருக்கலாம்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முன் மாதிரி தீர்ப்பு இருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தால், சபாநாயகர் தனபாலை யார் விட்டாலும், நான் விடப்போவதில்லை என்று பேசியிருந்தார்.
சபாநாயகர் தனபாலை, தினகரன் மரியாதைக் குறைவாகவும், மிரட்டும் வகையில் பேசியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரக்கோணத்தில் உள்ள 2 காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.