அரசு பள்ளியில் படித்த மாணவரா நீங்கள் ? கல்லூரியில் 50 சதவீத இடம் உங்களுக்குத் தான்…. அமைச்சர் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Sep 7, 2019, 9:10 PM IST
Highlights

பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் எம்.பி.ஏ. (சுற்றுலா மேலாண்மை) பிரிவு தொடங்குவதற்கான செயற்குறிப்பு அரசின் கருத்துரு உள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் வேலைவாய்ப்புகள் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடங்கப்படும்.

ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் பணி ஊதியத்துடன் குறுகிய கால ஒப்பந்தத்தின்பேரில் நிரப்பப்படும்.

அரசு பள்ளிகளில் பிளஸ்-2 வரை படித்த மாணவர்களுக்காக அனைத்து அரசு கல்லூரிகளிலும் 50 சதவீத சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டம் அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வரையறை செய்யப்படும். மற்ற மாணவர்களுக்கு வருவாய் அளவுகோல் நிர்ணயிக்கப்படும். அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 44 தீயணைப்பு வீரர்கள், 5 டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். மணிலா சாகுபடியாளர்களுக்கு செலவின மானியம் ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படும்.

click me!