கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு….எச். ராஜா கருத்தால் தமிழகத்தில் வன்முறை!!

First Published Mar 7, 2018, 8:46 AM IST
Highlights
coimbatore bjp office attack by petril bombs


பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது. அங்கு பாஜ வெற்றி பெற்றது. பண பலம், அதிகார பலம், பிரிவினை வாதம் போன்றவற்றை தூண்டிவிட்டு பாஜக வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் அகற்றினர். மாநிலம் முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ராஜாவின் இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன், திருமாவளவன்,சீமான், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை நகர பாஜக செயலாளர் முத்துராமன் உள்ளிட்ட சிலர் உடைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே கோவை  சித்தாபுதூரில் உள்ள பாஜக  அலுவலகம் மீது மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர்.  ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 

பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்த சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

click me!