பாமக தலைமையில் கூட்டணியா.?? ஒரு கட்சியும் சீண்டாது.. அவமானப்படுத்திய ரவீந்திரன் துரைசாமி

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2021, 11:24 AM IST
Highlights

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில் அதில் எந்த கட்சியும் சேராது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில் அதில் எந்த கட்சியும் சேராது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். அரை சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள கட்சிகள் கூட பாமகவுடன்  கூட்டணி வைக்க தயக்கம் காட்டும் நிலைதான் தற்போது உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

கடந்த காலங்களில் அதிமுக- திமுக என இரண்டு  கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து சொந்த சாதி மக்களை வைத்து அரசியல் செய்யும் ராமதாஸ் தனது குடும்பத்தை வளம் மிக்கதாக மாற்றிக் கொண்டாரே தவிர  தான் சார்ந்த சமுதாயத்திற்கும், தன் சமுதாய மக்களுக்கும் எந்த நன்மையும் அவர் செய்யவில்லை என்ற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர்களே பாமகவை புறக்கணித்து வரும் நிலையும் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த பாமக திடீரென கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பாமகவுக்கு சொல்வாக்கு மிகுந்த பகுதிகளில் தேர்தல் நடந்ததால் பாமக இந்த முடிவு எடுத்தது. தனித்து களமிறங்கியது பாமகவால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. 

வன்னிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளிலேயே தங்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பது அக்காட்சியை தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அப்படி என்றால் வன்னியர் மக்களே பாமகவை முழுவதுமாக இன்னும் அங்கிகரிக்க வில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் பாமகவை விமர்சித்துவருகின்றன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வன்னிய மக்களும் பாமகவுக்கு வாக்களித்திருந்தால் அக்காட்சி அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலிலாவது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 24 இடங்களை பெற்றாலும், அதில் போதிய அளவிற்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. எனவே ராமதாஸ் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதற்கான அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கூட்டணியில் இருந்த அதிமுக பாமகவுக்கு துரோகம் செய்ததுவிட்டது, பாமகவின் வாக்கு வங்கியை அதிமுக அறுவடையை செய்ததே தவிர, அதிமுக வாக்கு பாமகவுக்கு விழவில்லை என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.இது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேநேரத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியில் பாமக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புத்தாண்டு தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்படும். பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இருக்கும்,  நகர்புற பேரூராட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பா.ம.க போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, பாமக பார்கெய்னிங்க பவரை இழந்து நிறுகிறது அவர்களுடன் கூட்டணி வைக்க எந்த கட்சிகளும் விரும்பாது என கூறியுள்ளார் மேலும் அவர் கூறியிருப்பதன் விவரம் பின்வருமாறு :- எப்போதுமே அரசியல் கூட்டணியை பொருத்தவரையில் வெற்றி வீரர்களுக்கு தான் வரவேற்பு அதிகம். அந்த வகையில் இப்போது பாமகவுக்கு அந்த வரவேற்பு இல்லை. ஆனால் இன்று வட தமிழகத்தை பொறுத்த வரையில் வெற்றி வீரராக இருப்பவர் தொல். திருமாவளவன்தான், ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்த பாமகவுக்கு, அதிமுகவில்கூட வரவேற்பு இருக்காது. 2019ஆம் ஆண்டு  டிடிவி தினகரன் ஆர்கே நகர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெற்று அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அப்போது  ஆளும் கட்சியான அதிமுகவே இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே அப்போது ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிமுகவில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இணைத்துக்கொண்டார்.

ஆனால் அதற்கடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு உரிய அங்கீகாரத்தை அதிமுகவே கொடுக்கவில்லை. அன்புமணியும் தங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக முக்கியத்துவம் தரவில்லை என்று வெளிப்படையாகவே பேசியிருந்தார். அதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு பாமக வார் வெற்றி பெற முடியவில்லை. இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தங்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் முக்கியத்துவம் இருக்காது என்பதை உணர்ந்ததால்தான் ராமதாஸ் பாமக தலைமையில் கூட்டணி என அறிவித்திருக்கிறார். அதேபோல 2016இல் 12 கட்சிகளை கூட்டணியில் கொண்டுவர பாமக  பட்டியல் தயாரித்தது. அதில் நாம் தமிழர் கட்சியும் இருந்தது. ஆனால் சீமான் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது தனித்து போட்டியிடும் நிலைமைக்கு பாமக தள்ளப்பட்டு இருக்கிறது. 2016  நிலைமை தான் இப்போதும் பாமகவுக்க இருக்கிறது. வாக்கு வங்கி இழந்த, பலம் இழந்து விட்ட பாமகவின் தலைமையில் கூட்டணியை எந்த கட்சியும்  ஏற்காது. வலுவிழந்த பாமக உடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!