CMStalin : நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை… மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!

By Narendran SFirst Published Nov 29, 2021, 6:13 PM IST
Highlights

#CMStalin | நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நவம்பர் மாதத்துக்கான நூல் விலை கடந்த 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அனைத்து ரகங்களுக்கும் 50 ரூபாய் அதிரடியாக ஏற்றப்பட்டதால், தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நுாற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும் 1 ஆம் தேதி நுால் விலையை நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் கடந்த 2020 நவமபர் முதல் 2021 ஏப்ரல் வரை தமிழக நுாற்பாலைகள் ஒசைரி நுால் விலையை உயர்த்தியது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நுாற்பாலைகள் நுால் விலையை ஒரே சீராக தொடர்கின்றன. இந்த நிலையில் நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல்களும் ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சியடை வைத்துள்ளது. இந்த நிலையில், நூல் விலை உயர்வு தொடர்பாக தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது என்றும் இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்த்தே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் என்றும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும் மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் தனது கடிதம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.      

click me!