சுமார் 2,07,67000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153, 39 கோடி ரூபாய் செலவில் 2000 ரூபாய் வீதம் நிவாரணத்தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற முதல் நாளே 5 மக்கள் நல திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் குறிப்பாக கொரோனா காலத்தில் அவதியுறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் ரூ.4000 வழங்கப்படும். முதல்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். சுமார் 2,07,67000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153, 39 கோடி ரூபாய் செலவில் 2000 ரூபாய் வீதம் நிவாரணத்தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் திரும்பி உள்ள நிலையில், கட்டுப்பாடுகளும் மக்களின் துயரங்களும் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த திருநாள் முதல் ரூ.4000/- வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் 06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரையிலான காலத்திற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மேலே படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.