
சென்னை தலைமைச் செயலகத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்சிவ் தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அரசு சார்பில் கொரோனா படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன், சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தார்.
வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்! எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்! ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று தெரிவித்தார்.
பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும் அரசின் இலக்குகளைத் தங்களது இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காலிப் பணியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் தெரிவித்தார். அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் - பிரதிநிதிகள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.