மீண்டும் ஊரடங்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ள 3 முக்கிய தளர்வுகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 25, 2021, 4:09 PM IST
Highlights

தமிழகத்தில் 3 முக்கிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஊரடங்கு தளர்வுகளின் போது மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டது. இதில் கொரோனா குறையாத கோயம்புத்தூர், நீலகிரி , திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், என்ன மாதிரியான தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளார் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல் ஆணையர், உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு பங்கேற்றனர். 

இந்த முறை தமிழக அரசு அறிவிக்க உள்ள தளர்வுகளில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் 3 முக்கிய தளர்வுகளை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இருக்கும் தளர்வின் படி வகை 3ல் உள்ள 4 மாவட்டங்களில் மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ள 23 மாவட்டங்களிலும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது. எனவே அவற்றில் கணிசமாக தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் கோயில்கள் மற்றும் சிறு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கலாம் என்ற திட்டமும் அரசிடம் உள்ளதாக தெரிகிறது. இந்த 3 முக்கிய தளர்வுகளுடன் இன்று மாலை அல்லது நாளை காலை ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!