#BREAKING பாலியல் வழக்கில் சிக்கிய மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு அடுத்த ஆப்பு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

By vinoth kumarFirst Published Jun 25, 2021, 4:06 PM IST
Highlights

துணை நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

துணை நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 16ம் தேதி தள்ளுபடி செய்ததையடுத்து மணிகண்டன் தலைமறைவானார். இதனையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் தரப்பில், நடிகையைக் காயப்படுத்தியதாகக் கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆரம்பக்கட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், என்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் காவல்துறையின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். மேலும், தன்னை விட்டுப் போகக் கூடாது என நடிகைக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்தது, தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணிலிருந்து நடிகைக்கு போட்டோக்கள் அனுப்பியது, இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்தது ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மணிகண்டனைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார். அதேபோல, நடிகை சாந்தினி தரப்பில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று ஒத்திவைத்தார். 

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில்,  மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனின் உதவியாளருக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், மணிகண்டனின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!