தொண்டர்களுடன் அரவணைப்பு! நிர்வாகிகளுடன் நெருக்கம்! டாப் கியரில் சின்ன கேப்டன்!

By vinoth kumarFirst Published Nov 17, 2018, 10:07 AM IST
Highlights

அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவரது மனைவி தே.மு.தி.க பொருளாளர் ஆகி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனையும் அரசியலில் விஜயகாந்த் இறக்கிவிட்டுள்ளார். தனது சினிமா வாரிசாக இளைய மகன் சண்முக பாண்டியனையும், அரசியல் வாரிசாக மூத்த மகன் விஜய பிரபாகரனையும் வார்த்தெடுப்பதே கேப்டனின் லட்சியமாக இருந்தது.

அந்த வகையில் அரசியலில் இறங்கிய விஜய பிரபாரகனுக்கு கிடைத்துள்ள வரவேற்பு கேப்டனை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரபாகரன் பேசியதை பார்த்து கேப்டன் உணர்ச்சிவசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட கட்சிப்பணிகளை மேற்பார்வையிட விஜயபிரபாகரனை விஜயகாந்த் அனுப்பி வைத்தார். திருச்சியில் விஜய பிரபாகரனுக்கு தே.மு.தி.க தொண்டர்கள் கொடுத்த வரவேற்பால் மாநகரமே அதிர்ந்து போனது. 

கேப்டன் மகன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் திருச்சி சென்றது முதலே நிர்வாகிகள் அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடனேயே விஜய பிரபாகரன் பேசி வந்துள்ளார். மேலும் தன்னை பார்க்க காத்திருந்த தொண்டர்கள் அத்தனை பேரையும் பார்த்து நலம் விசாரித்தும் அவர் அனுப்பி வைத்தார். புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியவர்களுடனும் எவ்வித தயக்கமும் இன்றி விஜயபிரபாகரன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

மேலும் நிர்வாகிகளிடம் கட்சி விவகாரம் குறித்து பேசும் போது தலைவரின் மகன் என்கிற ரீதியில் பேசாமல் கட்சியின் நிர்வாகி என்கிற ரீதியில் விஜய பிரபாகரன் பேசியதை அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளே ரசித்துள்ளனர். மேலும் நிர்வாகிகள் கூறும் அனைத்தையும் விஜய பிரபாகரன் மிகவும் பொறுமையுடன் கேட்டதாக சொல்லப்படுகிறத. இந்த விஷயத்தில் கேப்டன் வழியில் இருந்து விலகி கேப்டன் மகன் வேறு ஒரு வழியில் செல்வதாகவே கூறப்படுகிறது. 

ஏனென்றால் நிர்வாகிகள் பேசுவதை கேப்டன் காது கொடுத்து கேட்கவே மாட்டார் என்கிற ஒரு குற்றச்சாட்டு உண்டு. மேலும் பார்த்தசாரதி கூறுவதையே கேப்டன் வேத வாக்காக எடுத்துக் கொள்வார் என்கிற புகாரும் இருந்தது. ஆனால் விஜய பிரபாகரனோ கட்சி விவகாரங்களை நேரடியாக கேட்டு கையோடு வைத்திருந்த ஆப்பிள் ஐ பேடில் குறிப்பெடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க அழிந்துவிட்டது என்று பலரு கூறி வந்த நிலையில் விஜயபிரபாகரன் வரவு மற்றும் பிரேமலதாவின் சுறுசுறுப்பு தொண்டர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

click me!