இதுக்காகத்தாங்க ரஜினியை சின்னம்மா சந்திச்சாங்க... திடீர் அரசியல் பரபரப்புக்கு சசிகலா தந்த அதிரடி விளக்கம்.!

By Asianet TamilFirst Published Dec 7, 2021, 8:57 PM IST
Highlights

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - ஈபிஎஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ரஜினியை சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்தது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அதுபற்றி சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரமாகப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு வழிவிட்டு சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு, மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார். தொடர்ந்து அதிமுக தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் சசிகலா தரப்பில் வெளியானது. மேலும் அதிமுகவை மீட்பேன் என்று கூறுவதோடு, பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு தற்போது தீவிரமாக சுற்றுப்பயணங்களில் சசிகலா இறங்கிவிட்டார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் - ஈபிஎஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ரஜினியை சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென ரஜினியுடன் சசிகலா சந்திப்பு ஏன் நடந்தது என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

கழகப் பொதுச்செயலாளர், அதிமுக முகாம் அலுவலகம் என்ற பெயருடன் சசிகலா தரப்பு அளித்துள்ள விளக்கத்தில், “சசிகலா நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனை பற்றியும் கேட்டு அறிந்தார். மேலும் ரஜினிகாந்தின் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் சசிகலா தெரிவித்து கொண்டார்” என்று அதில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. 

click me!